Tuesday, 12 May 2015

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை தொடங்கியது: ஜூன் 19-ம் தேதி கவுன்சலிங் தொடங்க திட்டம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை இன்று தொடங்கியது. முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.
2015 - 2016-ம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்கியது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று காலை 9.30 மணிக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் எஸ்.கீதாலட்சுமி விண்ணப்ப விற்பனையை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது டிஎம்இ டாக்டர் எஸ். கீதாலட்சுமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படும். 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்ப படிவங்களை www.tnhealth.org. மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ “ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மற்ற பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணத்தை “செயலாளர், மருத்துவ தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை 10” என்ற முகவரிக்கு வரைவோலை(DD) எடுக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூன் 12-ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது.
முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். மறுக்கூட்டல் மதிப்பெண்கள் வருவதில் தாமதம் ஏஎற்பட்டால், இவற்றில் மாற்றம் செய்யப்படும். கவுன்சலிங்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment