Wednesday 26 August 2015

பள்ளிகளை கட்டுப்படுத்த எத்தனை இயக்குனரகம்?

தமிழகத்தில், சமச்சீர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனரகங்களால், பள்ளிகள் ஒழுங்கின்றி செயல்படுகின்றன. எனவே, ஒரே இயக்குனரகம் கொண்டு வர வேண்டும் என, தனியார் பள்ளி அதிபர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. 2011 வரை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, பல பாடத்திட்டங்கள் இருந்தன. 2011ல் சமச்சீர் கல்வி அமலானதும், ஒரே பாடத்திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், பள்ளிகளின் இயக்குனரகங்கள் மட்டும் இன்னும் கலைக்கப்படவில்லை. அதனால், மெட்ரிக், நர்சரி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் எனத் தனித் தனியாக இயங்குகின்றன.
மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குகின்றனர்; படிக்காத மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என, அடிக்கடி புகார் எழுந்தாலும், பள்ளிக்கல்வி அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை. மாறாக, மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளும் அப்பள்ளிகளை கண்டிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ இல்லை.
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
சமச்சீர் கல்வி திட்டம் வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் இயக்குனரகங்கள் கலைக்கப்பட்டு, பொது கல்வி வாரியம் அமைத்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை பழைய வாரியங்களை கலைக்கவில்லை.
ஏற்றத்தாழ்வான நிலை:
அதனால், பள்ளிகளின் பெயரில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், அரசு பள்ளி என, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வான நிலை உள்ளது. மேலும், கல்வி உரிமை சட்டத்தை தனியார் பள்ளிகளில்
அமல்படுத்த, முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., மாவட்டக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ., போன்றவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இதற்கு பதில் மெட்ரிக் இயக்குனரகம் கீழ் செயல்படும் இணை இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் ஆய்வாளர்கள், தனி அதிகாரம் பெற்றவர்களாக வலம் வருகின்றனர். அதனால், மாணவர் மற்றும் பெற்றோரின் உண்மையான புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரச்னை குறித்து, தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தக்குமார் கூறியதாவது: தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தனியாக, ஒரு இயக்குனரகம் அமைக்க வேண்டும் என, நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் மூலம், விண்ணப்ப கட்டணம், உரிமக் கட்டணம் போன்ற பல பெயர்களில், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. பல இயக்குனரகங்கள் மூலம் பிரித்து, நிர்வாகம் சிதறிக் கிடப்பதால், பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து பள்ளிளையும் ஒரே இயக்குனரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment