Wednesday 26 August 2015

பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணியில் சேர முடியாமல் தவிப்போரும்; அரசு பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற முடியாமல் தவிப்போரும், சட்டசபை கூட்டத்தொடரில், தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என, காத்திருக்கின்றனர்.

குரூப் - 2 தேர்வு:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2008 நவ., 10ல், குரூப் - 2 தேர்வு நடத்தப்பட்டது; இதில் வெற்றி பெற்றவர்கள், 2009 செப்., 8ல், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதற்கு முந்தைய மாதத்தில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், '10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து விட்டு, திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும்; பதவி உயர்வு பெற முடியும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணை வெளியாவதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், திறந்தவெளி கல்வி முறையில் பட்டம் பெற்றவர்கள், 2009ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றிருந்தனர்; நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டனர். ஆனால், தமிழக அரசின் அரசாணை காரணமாக, அவர்களுக்கு இன்று வரைவேலை வழங்கவில்லை.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், '2008 -09ல், திறந்தவெளி பல்கலை மாணவர்கள் பெற்ற பட்டம் செல்லும். பட்டம் செல்லுமா, செல்லாதா என்பதை, யு.ஜி.சி., விதிகளின்படியே அளவிட முடியும். மாநிலஅரசின் அரசாணை மூலம் முடிவு செய்ய முடியாது' என, 2014 ஏப்., 21ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பின்னும், குரூப் - 2 தேர்வு எழுதியவர்களுக்கு, பணிகள் ஒதுக்கப்படவில்லை. அதனால், 'தங்களுக்கு அரசு பணி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வருக்கு அவர்கள் மனு அனுப்பி உள்ளனர்.அதேபோல், திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்று, அரசு பணியில் ஏற்கனவே சேர்ந்தவர்கள், 2009ல் வெளியிடப்பட்ட அரசாரணையால், பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது.
மன உளைச்சலோடு...:
இப்படி பல துறைகளில், ஆயிரக்கணக்கானவர்கள் பதவி உயர்வின்றி, மன உளைச்சலோடு பணிபுரிகின்றனர். அவர்களும், தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்துள்ளனர்.இருதரப்பினரும் தங்கள் பிரச்னைக்கு, இன்று கூடும் சட்டசபை கூட்டத்தொடரில், விடிவு பிறக்காதா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments:

Post a Comment