Thursday 20 August 2015

அரசு பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட்

       மருத்துவ படிப்புக்கான 2975 இடங்களில் 37 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 3 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் மாணவர்கள் (பிளஸ்-2) பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்கள்.

இத்தகைய மாணவர்களில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. தமிழகத்தில் 21 அரசு மருத்துவக்கல்லூரியில் 2,237 இடங்கள் மாநில  ஒதுக்கீட்டிற்காக உள்ளது. அதேபோல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மத்திய அரசு ஒதுக்கீடு போக, 738 இடங்கள் உள்ளது. இதற்கு மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணில் பெற்ற கட்-ஆப்  மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், நேரடியாக சேர்க்கை நடைபெறுகிறது.
இவற்றில் அரசு பள்ளியை காட்டிலும், தனியார் பள்ளிகளில் பயின்ற 95 சதவீதம் பேர் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில்(2014-15) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்களை மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கோரியிருந்தார். அதன்படி மருத்துவ கல்வி இயக்குநரகம் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை அளித்துள்ளது. அதில் கடந்த 2014-2015 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர் எண்ணிக்கை 37 பேர்(1.2 சதவீதம்), மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 3 பேர்(0.1 சதவீதம்), அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 96 பேர்(3 சதவீதம்) தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 2839 பேர்(96சதவீதம்) சேர்்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment