Friday 26 June 2015

அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படவுள்ள இந்தப்போட்டியில் 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கு அனுப்பப்படும் வடிவமைப்புகள் மை,
வாட்டர் கலர், ஆயில் கலர் அல்லது மற்ற வடிவமைப்பு முறைகளில் இருக்கலாம். போட்டியில் பங்கேற்போர் ஏ4 அளவில் உள்ள வரையும் தாள், ஆர்ட் பேப்பர் உள்பட அனைத்து வகையான வெள்ளைத் தாளையும் பயன்படுத்தலாம்.
கணினி முறையில் (Compuetr print, print out) அச்சிடப்பட்ட வடிவமைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அஞ்சல் அட்டை சேகரிப்பவரின் விருப்பத்துக்கேற்ப அஞ்சல் அட்டையில் அச்சிடப்படும் வகையில் இந்த வடிவமைப்பு இருக்க வேண்டும்.
போட்டிக்கு அனுப்பப்படும் வடிவமைப்பின் பின்புறம் பங்கேற்பாளரின் பெயர், வயது, இடம், அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய முழு முகவரி, தொலைபேசி, செல்லிடப்பேசி, மின் அஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும் வடிவமைப்பு எனக்குச் சொந்தமானது, இதனால் எந்த வகையான பிரச்னையும் வராது என உறுதியளிக்க வேண்டும்.
வடிவமைப்பு எந்த மடிப்பும் இன்றி ஏ4 அஞ்சல் உறையில் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதில் "குழந்தைகள் தினம் 2015- அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி' என்று குறிப்பிடப்பட வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாவது பரிசாக ரூ.6,000, மூன்றாவது பரிசாக ரூ.4,000 வழங்கப்படும். 
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் "கூடுதல் தலைமை இயக்குநர் (அஞ்சல் சேகரிப்பு) அறை எண் 108 (பி), டாக் பவன், நாடாளுமன்ற தெரு, புதுதில்லி-110001' என்ற முகவரிக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அஞ்சல் தலை வடிவமைப்புகளை அனுப்பலாம். மேலும் தகவல் பெற www.indiapost.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment