Monday 13 April 2015

இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடியது திருக்குறள்: எம்.ராசாராம்:

வாழ்க்கைக்குத் தேவையான அறக் கருத்துகளைக் கொண்ட திருக்குறள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே நிலைத்து நிற்கக் கூடியது என்று தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் எம்.ராசாராம் கூறினார்.சென்னை தியாகராய நகரில் உள்ள தருமபுர சமயப் பிரசார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமுறை உரைவளக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, "திருக்குறள் உரைவளம்' நூலை வெளியிட்டு எம்.ராசாராம் பேசியது:
அமைதியை நிலைநாட்ட சட்டம், ஒழுங்கைக் காப்பது மட்டும் போதாது, இறை நம்பிக்கை, ஆன்மிகம் ஆகியவையும் வேண்டும். இந்த இரண்டும்தான் அமைதியைத் தர முடியும்.

திருக்குறளே கடவுள் வாழ்த்தோடுதான் தொடங்குகிறது. இதில் கடவுள் வாழ்த்து, விருந்தோம்பல், ஈகை, புகழ் எனப் பல்வேறு நெறிகளை திருவள்ளுவர் கொடுத்துள்ளார்.
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னதுதான் திருக்குறள். அதனால்தான், திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தெய்வப் புலவரானார்.
உலக மொழிகளில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட சமயம் அல்லாத ஒரே நூல் திருக்குறள். திருக்குறள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
18-ஆம் நூற்றாண்டில் திருக்குறள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட போதுதான் தமிழ்நாடு என்ற ஒன்று இருப்பது உலகிற்குத் தெரிந்தது.
அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது தமிழ் மொழியின் சிறப்பை உலகம் அறிந்தது. திருக்குறளில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறக் கருத்துகளுடன் எழுத்தப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும்.
தமிழ் மொழி 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கருதப்படுகிறது. தமிழ் மொழியே உலகின் பிற மொழிகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அதற்குக் காரணமாக இருப்பது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இது உலகம் முழுவதும் ஒரே மொழி பயன்படுத்தப்பட்டபோது எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஆராய்ச்சியின் மூலம் அறிவித்திருக்கிறார்.
அவர் அப்படி குறிப்பிடுவதற்குக் காரணம், உலகில் அப்போது இருந்த இயற்கை வளங்கள், ஆறுகள் போன்றவற்றின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. உலகின் வேறு எந்த நூலிலும் அப்படி இல்லை என்றார் எம்.ராசாராம்.
நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் பேசியதாவது:
தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் அரிய நூல்கள் பலவும் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை ஆதீனத்தின் மூலம் 484 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆதீனத்தின் மூலம் சைவம், தமிழ் வளர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சுமார் 12 ஆகம பாடசாலைகள், 12 வேத பாடசாலைகள் இருக்கின்றன. ஆனால், தேவாரப் பாடசாலை தருமபுர ஆதீனத்தில் மட்டுமே உள்ளது. தேவாரப் பாடசாலைகளை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment