Friday 24 April 2015

மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி (மே 7) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த நடைமுறைகள் தீவிரமாகியுள்ளன.

பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க எந்தத் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்பது ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ஆம் தேதி வெளியானவுடன் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்கும்; அதற்கு முன்பாக எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் எம்.பி.பி.எஸ்., பி.இ. கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போன்றே நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டைப் போன்றே பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:
2015-16 பொறியியல் கலந்தாய்வு, எந்தவித மாற்றங்களும் இல்லாமல் கடந்த ஆண்டைப் போன்றே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக கலந்தாய்வு முடிக்கப்பட்டு விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment