Wednesday 28 January 2015

வி.ஏ.ஓ.: தேர்வானவர்களுக்கு இன்று முதல் பணியிடங்கள் ஒதுக்கீடு

            கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிட ஒதுக்கீட்டுக்கான உத்தரவு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.


 இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் கூறியது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 15-இல் வெளியானது.

எழுத்துத் தேர்வில் தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு முறையிலான பணியிட ஒதுக்கீடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மொத்தமுள்ள 2 ஆயிரத்து 234 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, புதன்கிழமை முதல் மாவட்ட வாரியான கலந்தாய்வுகள் தொடங்குகின்றன.

பிப்ரவரி 12 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் இந்த கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன.

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாவட்ட வாரியான பணியிட ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை வழங்குகிறார். தேர்வாணைய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment