Tuesday 27 January 2015

பொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 2ஆண்டு தேர்வு எழுத தடை; ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னையில் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்  தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில்  4 பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்  படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய முதன்மைக்  கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என  சுமார் 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பிளஸ் 2 தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபடுவோரை தடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இதன்படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத தடை  விதித்தும், துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும்  மாணவர்களை இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளது.  ஹால்டிக்கெட் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில்  மாணவ மாணவியரின் போட்டோக்கள் இடம் பெறுவதால் ஆள்மாறாட்டம் நடக்க வாய்ப்பில்லை. அதனால் பிட் அடிப்பது தொடர்பாக கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. 

தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்,  தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கண்டிப்பாக  செல்போன் வைத்துக்கொள்ள தடை  விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் துறை அலுவலர் கள் அல்லது போலீசார்  அவற்றை பறிமுதல் செய்து  மேல்தொடர் நடவடிக்கை  எடுப்பார்கள். 


ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை

தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதோ முறைகேடான செயல்களில்  நடந்துகொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை வாங்கி எழுதுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும்  மாணவர்களுக்கு நிரந்தரமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். மேலும் அந்த மாணவர்கள் மீது  காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும்  தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment