Wednesday 14 October 2015

தனியார் பள்ளிகளின் வசூல் வக்கிரகம் வெளியானது!

தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500 
ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, வேப்பேரியில் உள்ளது, டவ்டன் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளி, தமிழக பள்ளி கல்வித்துறை அங்கீகாரத்துடன், இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வியான, ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் படி செயல்படுகிறது. இங்கு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், கையில் மருதாணி போட்டுக் கொண்டதால், வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த மாணவனின் தந்தை ஜெயக்குமார் கூறியதாவது:

கடந்த மாதம், 23ம் தேதி முதல், காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. எங்கள் குடும்ப நிகழ்ச்சி, 24ம் தேதி நடந்ததால், என் மகன் கையில் மருதாணி போட்டோம்; 5ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது.

பள்ளியில், மாணவ, மாணவியர் நகம் வெட்டியுள்ளனரா; கைகள் சுத்தமாக உள்ளதா என, ஆசிரியர் சோதித்துள்ளார். அப்போது, என் மகன் கையில் மிகவும் லேசாக, மருதாணி வண்ணத்தின் தடம் தெரிந்துள்ளது. உடனே அவனை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, சிறிது நேரம் நிற்க வைத்துள்ளார். பின் உள்ளே அழைத்து, மறுநாள் அபராத தொகை கொண்டு வர உத்தரவிட்டு, ஹோம் வொர்க் நோட்டில் எழுதி அனுப்பினார்.

அதிர்ச்சியடைந்த நான், மறுநாள் அபராத தொகையாக, 50 ரூபாய் கொடுத்து அனுப்பி னேன். அதை ஏற்காமல், மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவனை திட்டி, 500 ரூபாய் கொண்டு வந்தால் தான், வகுப்பறைக்குள் விடுவோம் என, மிரட்டி அனுப்பினர். மறுநாள், நான் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தேன்; அதை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, 500 ரூபாய் கட்டி விட்டு வந்தேன். மூன்று நாட்களாக என் மகனை படிக்கவிடாமல் திட்டியதால், அவன் சோர்ந்த நிலையில் உள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.


இச்சம்பவத்தால், மற்ற பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர், பாடம் நாராயணன் கூறும் போது, வணிகரீதியில் பணம் வசூலிப்பதற்காக, இதுபோன்ற நிபந்தனைகளை பள்ளிகள் விதிக்கின்றன. ஏழு வயது குழந்தையை இப்படி துன்புறுத்திய பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை கேட்போம்,என்றார். இச்சம்பவம் பற்றி, முதன்மைக் கல்வி அதிகாரி அனிதாவிடம் கேட்ட போது, இதுகுறித்து விசாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பள்ளி நிபந்தனைகள் என்ன?


இரண்டு நாட்கள் அனுமதியின்றி பள்ளிக்கு வராவிட்டால், 1,000 ரூபாய் அபராதம்
மூன்று நாட்கள் வராவிட்டால், மாணவன் பள்ளியை விட்டு சென்றதாக கருதப்படும்; மீண்டும் வந்தால், ரீ அட்மிஷன் கட்டணம், 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் நீண்ட முடி வளர்க்கக் கூடாது. மாணவ, மாணவியர் தங்க நகை அணிந்து வரக்கூடாது; நகப்பூச்சு செய்யக் கூடாது; மருதாணி போடக் கூடாது; மீறினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மாணவர்கள், பள்ளிக்குள் ஓடவோ விளையாடவோ கூடாது. தங்கள் உடைமைகளை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment