Friday 30 October 2015

அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு

அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில், தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரையில் முதலீடான தொகை ரூ.2,328 கோடி ஆகும். இதற்கு முன்பு வரையில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தொடக்க காலம் என்பதால் அரசு இரண்டு ஆண்டு சலுகை வழங்கி திட்டத்துக்கான பெண் குழந்தைகளின் வயதை 12-ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சலுகை வரும் 1.12.2015-ஆம் தேதி முடிவடைகிறது. அதனால் 3.12.2003 முதல் 2.12.2005 வரை பிறந்த பெண் குழந்தைகள் இத் திட்டத்தில் வரும் 1.12.2015 வரையில் சேரலாம். வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு, 10 வயது வரையில் உள்ள குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் அடைய முடியும்.
இதை பள்ளிகளில் 6,7-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பள்ளிகளில் ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். செல்வமகள் சேமிப்புக் கணக்கை கிளை அஞ்சலகங்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். இந்தக் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தது ரூ.1000-ம் செலுத்த வேண்டும். அதையடுத்து, ரூ.100 அல்லது அதன் மடங்குகளாகவோ செலுத்தலாம். இதில், குறிப்பிட்ட தவணை முறைகள் இல்லாமல் வசதிக்கேற்ப பணம் செலுத்தும் வசதி உண்டு. எல்லா அஞ்சலகங்களிலும் இதற்கான சிறப்பு சேவை முகாம் நவம்பர் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் 9.2 கூட்டு வட்டி மிக கணிசமானதாகும் என்றார் மெர்வின் அலெக்சாண்டர்.

No comments:

Post a Comment