Wednesday 14 October 2015

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் "அனைவருக்கும் உயர்கல்வி' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. கருத்தரங்கை உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தொடக்கி வைத்தார். 
கருத்தரங்கில், தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தையும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாச்சலம் கூறியது:
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகளாக உயர் கல்வித் துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது. அப்போது, அவற்றை பரிசீலித்து அரசுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
கருத்தரங்கில் "அனைவருக்கும் உயர்கல்வி' என்ற தலைப்பில் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார் அவர்.

No comments:

Post a Comment