Wednesday 14 October 2015

இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

 ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் 
இருப்பவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரலாம்.


சிட்டியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாயாவது தேவையாக உள்ளது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த தொகையை மொத்தமாக தருவது என்பது இயலாத காரியம்.




அதனால் தான் வங்கி கடனுக்கு செல்கிறார்கள். ஆனால் வங்கியில் உள்ள விதி முறைகள் படி அதிக பட்சம் 80% தான் வங்கி கடன் தருவார்கள். மீதி 20% என்பதை நாம் கையில் இருந்து தான் போட வேண்டும். இதனை வங்கி பாசையில் Loan-To-Value என்று சொல்வார்கள்.

அப்படி என்றாலும் நாம் கையில் இருந்து போட வேண்டிய காசை பார்த்தால் 30 லட்ச ரூபாய் பிளாட்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருகிறது.

இந்த தொகை மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பெரிய தொகையே. அதனால் பலர் இந்த காசு சேரும் வரை பிளாட் வாங்குவதை தள்ளி போடுகின்றனர்.

ஆனால் காசு சேர்ந்த உடன் பார்த்தால் மீண்டும் பிளாட் விலை கூடி விடுகிறது. அதனால் மீண்டும் மார்ஜின் தொகை கூடி விடுகிறது. இந்த மார்ஜின் தொகையை சேர்ப்பதற்கு மீண்டும் சேமிப்பு என்று தொடர்கதை நீண்டு விடுகிறது.

இந்த நிலையில் தற்போதுள்ள ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஆரம்பக் கட்ட தொகை இல்லாமல் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு சிறிய நிம்மதி கொடுக்கும்.

ரிசர்வ் வங்கி இனி 90% வரை வீட்டுக் கடன்களுக்கு லோன் கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் நமது கை காசை 10% அளவுக்கு போட்டால் போதும்.

அதாவது 30 லட்சம் ரூபாய் பிளாட்டிற்கு 3 லட்சம் ரூபாய் முதலில் முதலீடு செய்தால் போதும். மீதி 27 லட்சத்தை கடன் வாங்கி கொள்ளலாம்.அதனால் வீடு வாங்குவதை கொஞ்சம் அழுத்தம் இல்லாமல் செய்யலாம்.

சுணங்கி கிடக்கும் ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு இந்த அறிவிப்பு கொஞ்சம் மீள்வைக் கொடுக்கும். அதிகம் பேர் வீடு வாங்க வர வாய்ப்பு உண்டு.

ஆனால் ஒன்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வங்கியில் நமக்கு லோன் தரும் போது Credit Risk Rating என்ற ஒன்று உண்டு. அதாவது ரிஸ்கை பொறுத்து தான் நமது கடன்களுக்கு வட்டி நிர்ணயிக்கப்படும்.

தற்போதைய புதிய விதி முறையின் படி 80%க்கும் மேல் கடன் வாங்குபவர்களுக்கு 50% ரிஸ்க் சதவீதமும், 80%க்கு கீழ் கடன் வாங்குபவர்களுக்கு 35% ரிஸ்க் சதவீதமும் வகுக்கப்பட்டுள்ளது.

இதனால் நீங்கள் 90% அளவு கடன் பெற்றால் உங்கள் வட்டி சதவீதம் 0.25% அளவு அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது.

இறுதியாக இந்த புதிய விதிமுறை 30 லட்சத்துக்குள் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் பிளாட் விலை 33 லட்சத்துக்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த விதி முறையால் பயனடைய முடியும்.

No comments:

Post a Comment