""""தினமணி கதிர் """" புத்தகத்தில் வெளிவந்த செய்தி [ 07-06-2015 ]
நாம் மறந்துவிட்ட பாரம்பரிய கலைகளில் பொம்மல்லட்டாமும் ஒன்று .அதை மீட்டெடுத்து பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் உரமூட்டி வருகிறார் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியரான தாமஸ் ஆண்டனி .ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம் அரசு
நடுநிலைப்பள்ளியில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்து வருகிறது . இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து படிக்க வருபவர்கள். சிலரது பெற்றோர்கள் நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருப்பதால் தங்கள் குழந்தைகளை கவனிக்க முடியாதவர்கள் .இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் கவனத்தை பொம்மலாட்டம் மூலமாக கவர்ந்து பாடம் நடத்த முடிவு செய்தேன் என்கிறார் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி .அவருடன் பேசியபோது : நான் சின்ன வயதில் இருந்தே பல குரல்களில் மிமிக்ரி செய்வேன் .நான் பல இடங்களில் அலைந்து திரிந்து இறுதியில் சென்னைக்கு வந்து எனது சொந்த செலவில் பொம்மைகள் வாங்கினேன் .பொம்மலாட்ட திரைச் சீலை நானே வடிவமைத்தேன் .திரைக்கு பின்னால் நின்றுகொண்டு திடீரென்று திரைச்சீலைக்குப் பின்னால் நின்றுக்கொண்டு பொம்மைகள் மட்டும் தோன்றுமாறு செய்து நான் முழுவதுமாக மறைந்து கொள்வேன் .பாடங்களில் உள்ள பாரதியார் ,பாரதிதாசன் ,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவர்களின் பாடல்களை ஒரு சின்னக்குழந்தை பாடினால் எப்படி இருக்குமோ அப்படி எல்லாம் பொம்மைகள் பாடுவது மாதிரி பாடிகாட்டுவேன் .
பெண்குரல் ,வயதானவர்கள் ,தடித்த அப்பாவின் குரல் ,பிரபல நடிகர்களின் குரல் என எட்டுக்கும் மேற்பட்ட குரல்களில் மாற்றி மாற்றி பேசி பாடத்தை மனதில் பதிய வைப்பதுடன் உற்சாகம் குறையாமலும் பார்த்துக் கொள்கிறேன் .
இவ்வாறு நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தெரியாதவாறு பொம்மைகள் உயர்த்தி பிடித்தவாறு பாடம் நடத்துவதால் பயங்கரமாக கைகள் வலிக்கும் .ஒரே சமயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை கைகளில் மாட்டிக்கொண்டு பாடத்திட்டங்களை பார்த்து படித்தல் ,பொம்மைகளை அசைத்தல் ,குரல்களை மாற்றி ,மாற்றி பேசுதல் என செய்து கொண்டே இருப்பது சவாலான விஷயம் தான் .ஆனால் எனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது .
ஆசிரியர் முன்னாள் இருந்தால் தப்பாகி விடுமோ ,தண்டனை கிடைக்குமோ என்ற பயமும் ,தயக்கமும் இல்லாமல் ,பொம்மைகள் முன்பாக தங்கள் கருத்துகளை இயல்பாக வெளிப்படுத்துகின்றனர் .பலமுறை தங்கள் சந்தேகங்களை கேட்டுத் திருத்திக் கொள்கின்றனர் .மாணவர் ,ஆசிரியர் இடையே இடைவெளி மறைந்துவிட்டது .இப்போது எந்த குழந்தைகளும் விடுமுறை எடுப்பதில்லை .குழந்தைகளின் நினைவாற்றல் திறன் பன்மடங்கு அதிகரித்து உள்ளது .
ஒரே மாதிரியான பொம்மைகளை வைத்து பாடம் நடத்தினால் ,மாணவர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால் 2000 ரூபாய் செலவில் பெரிய குரங்கு பொம்மை வாங்கி வந்து அதன் மூலம் பாடம் நடத்துக்கிறேன் .இந்த குரங்கு பொம்மை பெயர் டிங்கு .எனது இடுப்பில் உட்கார்ந்து இருக்கும் .மாணவர்களிடமும் குரங்கு
பொம்மையிடமும் ,நான் பேச வேண்டும் .அதே நேரத்தில் பதிலுக்கு குரங்கு பொம்மை பேசுவதுபோல லிப் மூவ்மெண்டுடன்,எனது கையை குரங்கு பொம்மைக்குள் விட்டு ,குரங்கு பேசுவதுபோல ,மிமிக்கிரியும் செய்ய வேண்டும் .அப்பொழுது எனது வாய் அசையக்கூடாது .அசைந்துவிட்டால் குரங்கு பேசவில்லை .நான்தான் பேசுகிறேன் என்று மாணவர்களுக்கு தெரிந்துவிடும் .இந்த முறைக்கு வெண்ட்ரிலோகிசம் என்று பெயர் .இந்த முறையை கற்றுக்கொள்ள எனது சொந்த முயற்சியில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன் .
இந்த டிங்கு மூலம் நீதிக்கதைகள் ,சிந்திக்க வைக்கும் நகைச்சுவை துணுக்குகள் ,அறிவூட்டும் பட்டிமன்றங்கள் ,எல்லாம் நடத்துவேன் .டிங்குவை நடுவராக வைத்து பட்டிமன்றம் நடத்தினால் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்வர் .இதனால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்கிறார் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி .
No comments:
Post a Comment